மார்கழி பாவை 12

விடியும்வரை தூங்கிப்பழகிய உன்னை
மார்கழியில் மட்டும்
விடியலுக்கு முன்னே எழுப்புகிற
உன் அம்மாவுக்குத் தெரியுமா?
மார்கழியில் மட்டும்
உனது கோலத்தில் தான்
சூரியனே கண்விழிக்கிறானென்பது?
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

மார்கழி பாவை 11

மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
நகர்ந்து நகர்ந்து
நீ வரையும்
அரிசிமாவுக் கோலத்துக்கு போட்டியாக,
தொடர்ந்து வந்து
நீர்க்கோலம் வரைகிறது
உனது ஈரக்கூந்தல்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

மார்கழி பாவை 9

இத்தனை நாட்களாய்
முற்றத்திலமர்ந்து
ஓர் ஓவியனின் நேர்த்தியோடு
உள்ளங்கையில் நீ வரைந்த
மருதாணி ஓவியங்களைப்
பொறாமையுடன் பார்த்துவந்த
நிலத்தின் ஏக்கத்தையெல்லாம்
வண்ணம் கொண்டு
தீர்த்து வைக்கின்றன
உனது மார்கழி ஓவியங்கள்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

மார்கழி பாவை 8

அழகாய்ப் பூத்தும்
காய்த்தபின்னே பூப்பதால்,
பூசணிச்செடியைக் கேலி செய்தனவாம்
நீ விரும்பும் மல்லிகையும் ரோஜாவும்!

ஆனால்
மார்கழிக் கோலத்திற்கென
நீ பூசணிப்பூக்களைப்
பறிக்கத் துவங்கியதிலிருந்து
பூச்செடிகளுக்கு மத்தியில்
பூசணிக்குத் தனி மரியாதையாம்.
அந்த மகிழ்ச்சியில்
இப்பொழுதெல்லாம்
முதலில் பூத்து
அப்புறம்தான் காய்க்கிறது தெரியுமா?
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

மார்கழி பாவை 7

மார்கழி விடியலில்
கோலமிடும் ஆயத்தத்துடன் வருகிறவள்
மேகம் துடைத்த தூய வானம் காட்டி
‘நீ என் வானம்’ என்றவாறு பார்க்கிறாய்.
நான் பதிலற்று நின்றிருக்க
அதிர்ச்சியுடன் முறைக்கிறாய்.

‘ஆமாம்.
நீ கோலமிடுவாயென
தன் மீது புள்ளி வைத்து
இரவெல்லாம் காத்திருக்கிறது வானம்.
நீயோ வாசலிலேயேக் கோலமிடுகிறாய்.
நான் வானமா? நிலமா?’ என்றேன்.

அச்சச்சோ!
அப்படியென்றால்
‘நீ என்னைத் தாங்கும் நிலம்’ என்று சொல்லி
வழக்கம்போல வாசலில் புள்ளி வைக்கத் துவங்குகிறாய்.
அதனை முத்தமாக ஏந்திக்கொள்கிறது இந்த நிலம்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

மார்கழி பாவை 6

மார்கழி முழுவதும்
நம்வீதியெங்கும் தேனீக்கள் கூட்டம்.
உனக்குத் தெரிந்தது 'பூக்கோலம்' மட்டும்தானா?
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.