[singlepic=30,480,360,watermark]


முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.


புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியரும், சென்னை கலைக்குழுவின் தலைவருமான பிரளயன் அவர்களின் இயக்கத்தில், நாடகத்துறை ஆசிரியர், மாணவர்களின் பங்களிப்புடன் உருப்பெற்ற பாரி படுகளம், பார்வையாளரை, வெறும் பார்வையாளராக மட்டுமே வைத்திருக்காமல் நாடகத்தின் காட்சி, உரையாடல், சொற்பயன்பாடுகளால் அவரையும் அதன் உள்ளே இழுத்துச் சென்று பொருள் தேடவைக்கிறது.


ங்கவை, சங்கவை என இரு மகள்களுக்குத் தந்தையான பாரி மன்னனும், அந்நாட்டு மக்களும் வளம்மிக்க பறம்பு மலையில் இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களின் நிலத்தையும், பெண்களையும் வலிந்து கைப்பற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வஞ்சகமாக சூழ்ச்சி செய்து இணைந்து போரிடுகிறார்கள். இறுதியில் மூவேந்தர்களின் அம்புகளை நெஞ்சிலேந்தி கபிலரிடம் நியாயம் கேட்டு புலம்பியபடி, படுகளத்தில் பாரி மன்னன் உயிர் துறப்பதுடன் நாடகம் முடிகிறது.



[flashvideo filename=video/paadal.flv /]

துவக்கத்தில் வரும் ஆண்களும் பெண்களுமாய் இணைந்து கலை மாந்தர்கள் கள்ளருந்தும் காட்சி, இன்றைக்கு ஆண்கள் மதுவருந்துவதை உடல்நலத்தீங்காகவும் பெண்கள் மதுவருந்துவதை மட்டும் பண்பாட்டுச்சீர்கேடாகவும் பார்க்கிற கண்களுக்கு சங்க காலப் பண்பாட்டை நினைவூட்டிச்செல்கிறது.


சோழ மன்னனின் ஒற்றனாக பறம்பு மலைக்கு வந்து, ஆதிரையெனும் வேளிர் குலப்பெண்ணிடம் காதல் கொண்டு விட்ட அஞ்சுதன் சாத்தன், தனது அலுவல் துறந்து அவள் காலைப்பிடித்து மன்றாடியபோதும் அயல்நாட்டு ஒற்றனின் காதலைவிட தாய்நாடு முக்கியமென உதறிச்செல்கிறாள் அவள். பிறகு சோழ மன்னனின் படையாட்களினால் கொலை செய்யப்பட்டு மடிகிறான் அஞ்சுதன் சாத்தன்.


ணிகம் செய்வதற்காக பாரியைக்காண யவன வணிகர்கள் வருகையில் அருகிலிருக்கும் அங்கவையும் சங்கவையும் விடைபெற்று எழும்போது அவர்களை அமரச்சொல்லி அரசு அலுவலில் பங்கெடுக்கச் சொல்கிறான் பாரி.(33% விழுக்காடு எப்பொழுது வரும்? ;)) வருகிற வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கு ஈடாக பறம்பு மலையில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து பாரி இப்படி கூறுகிறான் – ‘பறம்பு மலையில் இருக்கும் மக்கள் பறம்பு மலையின் எசமான்கள் அல்ல. இங்கிருக்கும் மரம், செடி, பறவை போல மனிதனும் மற்றுமோர் உயிர். எங்கள் நலனுக்காக இயற்கை வளங்களை அழிக்க முடியாது’ (தொழில் வளம் பெருக, வயல் நிலங்களையும், ஆற்று மணலையும் அள்ளிக்கொடுக்கும் அரசுகளைக் கண்டால் பாரி என்ன சொல்லுவான்?)


தன்பிறகும், மரம் கொடுத்தால் யவன நாட்டுப் பெண்கள் பாரியின் அந்தப்புரத்தை அலங்கரிப்பார்களென வணிகர்கள் சொல்ல, அதுவரைஅமையிதியாயிருந்த அங்கவை பொங்கியெழுகிறாள் – ‘பாரி மக்கள் நாங்கள் இருக்கும்போதே பெண்களை வணிகப்பொருளாக நினைத்துப்பேச என்னத் துணிச்சல்’ என கோபமாய்ச் சீறுகிறாள். அங்கவை, சங்கவை என்றதுமே ஒரு மட்டமான திரைப்பட நகைச்சுவைக் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும் அயோக்கியத்தனத்தை அனுமதித்த நாம் குறைந்தபட்சம் அந்த பெயர்களில் வாழ்ந்த வரலாற்று மாந்தர்களின் மாண்புகளைப் புரிந்து கொண்டால் நலம். அதற்கு இந்நாடகம் துணை நிற்கிறது.


ன்னொரு முக்கிய காட்சி நடுகல் வழிபாடு. நடுகல் வழிபாட்டில் பெண்களுக்கே முதல் உரிமை கொடுத்துக் கொண்டாடுகிறான் பாரி. இயற்கையையும், முன்னோர்களையும் வழிபடுகிற வீரவணக்கம் செலுத்துகிற மாவீரர்  நாளாக அதனை பாரி கூறுகிறான். இந்த சொற்பயன்பாடு இன்றைய ஈழப்போரில் மடிந்த போராளிகளை நினைவுகூர்கிற மாவீரர் நாளையே நினைவுபடுத்துகின்றது. சேர, சோழப் பாண்டிய நாடுகளின் கூட்டுப்படை (இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்ல?) பாரியின் படையினைத் தோற்கடிக்க முடியாமல் திணறுகிற நேரம், மூவேந்தர்களின் ஆலோசனையில் நடக்கிற உரையாடல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


ரு வேளிர்ப்படை வீரனைக் கொல்வதற்கு கூட்டுப்படையில் இருபது வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதேயென சோழ மன்னன் புலம்ப, சேரன் கூறுகிறான் – ‘அடுத்த நாட்டு நிலத்தை கைப்பற்ற நினைக்கிற வீரனின் உறுதிக்கும் தாய்நாட்டு நிலத்தைப் பாதுகாக்கப் போரிடுகிற வீரனின் உறுதிக்கும் இயல்பிலேயே வேறுபாடு உண்டு’. பாண்டியனின் கூற்று –‘ நமது வீரர்கள் கூட்டுப்படைத்தளபதியின் கட்டளைப்படிதான் போரிடுகிறார்கள். வேளிர்ப்படை வீரர்களோ உரிமைக்காகப் போரிடுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.’ இன்று வரை இனப்போராட்டங்கள் இப்படிதானே தொடர்கின்றன.


ந்தப் போரை நிறுத்துவதற்காக மூவேந்தர்களிடம் கபிலர் வேண்ட, பாரி, தங்களுக்கு கப்பம் கட்டியிருந்தாலோ, தங்களுக்கு கீழ் குறுநில மன்னனாக இருக்க ஒப்புக்கொண்டிருந்தாலோ, தன் மகள்களை மகட்கொடையாக அளித்திருந்தாலோ போரை நிறுத்தியிருக்கலாமென பெருங்குடி மனப்பான்மையுடன் கூறுகின்றனர். அப்பொழுது தமிழால் அனைவரும் ஒன்றுபடலாமென மூவேந்தர்களிடம் கபிலர் பேசுகிறார்.


பெருங்குடி மன்னர்களான எங்களையும் சிறுகுடி மன்னனான பாரியையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப்பார்க்க முடியுமென கேட்ட அவர்களின் குரல் தான் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் ஆதிக்க சாதியின் குரலாக உத்தப்புரத்திலும், பெரும்பான்மை மதத்தின் குரலாக ஒரிசாவிலும், ஆதிக்க இனத்தின் குரலாக இலங்கையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


மிழ் பேசும் நமக்குள் பெருங்குடி, சிறுகுடியா? கெட்டது தமிழ்க்குடியென கபிலர் விடைபெறுகிறார். இன்றைக்கும் கபிலர்கள் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் பெருங்குடிகளின் மனம் தான் பல நூற்றாண்டுகளுக்கும் சேர்த்து இறுகிக்கிடக்கிறது.


[flashvideo filename=video/kabilar.flv /]


மூவேந்தர்களின் கூட்டுப்படை போரைத்தொடங்கும்போதே பாரியை வீழ்த்தியபிறகு மூவருக்கும் என்னென்ன வேண்டுமென்று மூவேந்தர்களும் பங்கு பிரிக்க ஆலோசனை நடத்துவது இன்றைய அரசியல் கூட்டணி பேரங்களை ஞாபகப்படுத்துகிறது. பறம்பு நாட்டு பெண்ணொருத்தி வாளேந்திப்போரிடுவதும், இன்னொருத்தி ஆட்டுக்குட்டியைக் குழந்தையென மறைத்துக் காப்பாற்றத் துடிப்பதும் வேளிர்குல பெண்களின் இயல்புகளைக் காட்டும் காட்சிகள்.


டுகளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரி மரணத்தின் விளிம்பிலிருந்து, ‘மானத்தோடு வாழ நினைத்ததும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயர்நோக்கோடு வாழ்ந்ததும் தவறா?’ என்று கபிலரிடம் புலம்புகிறான். மூவேந்தர்களையும் தமிழால் ஒன்றிணைக்க தாம் முயன்று முடியாமல் போனதைச் சொல்லி கபிலரும் வருத்தப்படுகிறார். தமிழால் நாம் ஒன்றிணைய முடியாதென்றும், குடிபேதம் மறுத்த, குடிபேதம் பேணாத தமிழால் மட்டுமே நாம்  ஒன்றிணைய முடியுமெனச் சொல்லி மாண்டு போகிறான் பாரி. அத்துடன் நாடகமும் நிறைகிறது.


[flashvideo filename=video/paari.flv /]


ரங்க அமைப்பு, உடை, ஒப்பனை, ஒளி, இசை, பாடல் என நுட்பமுறையில் பாரி படுகளம் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட கதைத்தேர்வும், உரையாடல்களும், காட்சிகளும் பாராட்டுதலுக்குரியவை. ஆனால் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில நடிகர்களின் நடிப்பு/மொழி உச்சரிப்பு இல்லாமலிருந்தது சிறு குறையாக தெரிந்தது. ( நாடகம் வெளியரங்கில் நிகழ்ந்ததும், சில நடிகர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருந்ததும் காரணமாக கொள்ளப்பட்டது.) அதே போல சில நீளமான பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடகம்.


[singlepic=31,480,360,watermark]


வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

கவிதை பிரசவம்

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன...
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

முத்தம்

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது...
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

A for Apple

மயூரேசன் அழைத்ததால்...

b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e - http://en.wikipedia.org உருப்படியா தேட
f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g - http://www.google.com கண்டதையும் தேட
i - https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
   http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j - http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k - http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m - http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க...
n - http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p - http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s - http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t - http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v - http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!

தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார் 
2. எழில் 
3. Sri

Rule:

  1. The Tag name is A for Apple

  2. Give preference for regular sites

  3. Ignore your own blogs, sites.

  4. Tag 3 People.


வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

பச்சக் கலர் கேரட்

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் 'யாரும் மூச்சு விடக்கூடாது', 'யாரும் மூச்சு விடக்கூடாது' ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது...'நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்'

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*


 


இரண்டு முத்தங்கள் கொடுத்து


இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.


இயலாத செயலென


இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


 


*


 


யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்


எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள


என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.


எப்பொழுதும் அளந்தே பேசுபவன்


உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே


அளவின்றி பேசுகிறேன்.


 


*


 


உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்


எனதுவிழிகளைவண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட


சிறகடித்து தவிக்கும் இமைகள்!


 


*


 


தனியேநீமுணுமுணுக்கும்


இனியபாடல்கள்


இசைத்தட்டில்ஒலிக்கையில்


இனிமைஇழப்பதேன்?



*



மேலும் சில காதல் கவிதைகள் :

மார்கழிப்பாவை

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதைகள்

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

காதல் யந்திரம்

காதல் யந்திரம்


சிறியவனாயிருந்த காலத்தில் எந்தப் பொருளையாவது தொலைத்துவிட்டு அப்பாவிடம் அடி வாங்கும்பொழுதெல்லாம் யோசித்திருக்கிறேன், கடந்த காலத்துக்கு சென்று அந்தப் பொருளை எங்கு வைத்தேனெனெத் தெரிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? காலயந்திரம் உருவாக்கும் சாத்தியக்கூறுகளுக்கான எனது தேடல் இப்படித்தான் துவங்கியது. பள்ளிக்காலம் வரைக்கும் எப்படியாவது கடந்த காலத்துக்கு செல்வதே எனது எதிர்கால இலட்சியமாக இருந்ததென்று சொல்லலாம். பள்ளியிறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் உலகம் அழியப்போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபொழுதுதான் Nostradamus அறிமுகமானார். எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்ற ஆர்வத்தில் அவரது The Prophecies புத்தகத்தை தேடிப்படித்தபோதும் எனக்கதில் பெரிய ஈர்ப்பு வரவில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


 


+2 முடித்து திருச்சி RECயில் EEE சேர்ந்தபின்னர் எலக்ட்ரானிக்ஸ் சிப்புகள் எல்லாம் விதவிதமாக பிணைந்து காலயந்திரமாக உருவாவது போல கனவு கண்டேன், இரவு பகல் இரண்டிலும். கல்லூரிகாலத்தில் தான் வெறும் தேடலாக இருந்த எனதார்வம் ஓர் ஆராய்ச்சிக்கான துவக்கமாக உருமாறியிருந்தது. Time machine, time travel குறித்த புனைவுகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என எல்லாவற்றையும் தேடித்தேடி வாசித்தேன். Sci-Fi திரைப்படங்கள் எனது கணினித் திரையில் விடிய விடிய ஓடிக்கொண்டிருந்த காலமது. காலம் என்பது நான்காவது பரிமாணம் என்பதும், கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் புள்ளிதான் நிகழ்காலமென்பதால், நிகழ்காலம் என்ற ஒன்றே கிடையாதென்பதும் புரிபடத் துவங்கியது. எனது புரிதலைக்கொண்டு கல்லூரி இறுதியாண்டில் காலயந்திரம் உருவாக்குவதற்கான Proof Of Concept மாதிரி நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விளக்கினேன். எவனும் மதிக்கவில்லை. வெறுப்பாக வந்தது.


 


கல்லூரி முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து டெல்லிக்கு வந்த பின்னரும் காலயந்திரம் தன்னை உருவாக்க சொல்லி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அலுவல் நேரம் போக தினமும் ஆறு மணிநேரமாவது இதற்காக செலவு செய்தேன். எனது அறை கிட்டத்தட்ட ஓர் ஆய்வுக்கூடம் போலவே வளர்ச்சியடைந்திருந்தது. நான்காண்டு உழைப்பு பெரிய முன்னேற்றமெதனையும் தந்துவிடவில்லை. போகாத ஊருக்கு வழித் தேடுகிறேனோ என்று சலிப்பேற்பட்ட போதும் புதிய ஊரினைக்கண்டு பிடிக்கும் காட்டுவழிப் பயணத்தைப்போல எனது ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது விடாமுயற்சி வீண்போகவில்லை. கடந்த காலம், எதிர்காலம் இரண்டுக்கும் பயணிக்கும்படி உருவாக்கியிருந்த எனது காலயந்திரம் அன்றிரவு எதிர்காலத்துக்கு மட்டும் வேலை செய்ய துவங்கியிருந்தது. காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு அம்மாவை நினைத்தபடி கண்மூடினேன். அடுத்த ஓராண்டில் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சந்திப்புகள் மனத்திரையில் ஓடத் துவங்கின. ஓராண்டுக்குப்பிறகு வெற்றுத்திரையே தெரிந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். எதையோ சாதித்துவிட்ட திருப்தியிருந்தது. சட்டென அந்த யோசனை வரவும் மீண்டும் காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு காலயந்திரத்தையே நினைத்த படி கண்மூடினேன். முதல் காட்சியைப் பார்த்ததுமே என் இதயம் துடிப்பதை நிறுத்தி மகிழ்ச்சியில் குதிக்கத் துவங்கியது. ஆம், அடுத்தநாள் காலை அது கடந்த காலத்துக்கும் வேலை செய்வதை நான் பரிசோதிக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு வீதியில் ஓட வேண்டும் போலிருந்தது. உற்சாகமிகுதியில் மதுவருந்துவதற்காக அந்த மதுவிடுதிக்குப் போயிருந்தேன். மூன்றாவது கோப்பை VSOP உள்ளே போனபிறகுதான் பக்கத்து டேபிளில் தனியே இருந்த அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது.


 


‘டேய், நீ அருள் தான?’ என்று கேட்டுக்கொண்டு அவனை நெருங்கினேன். அருள்முருகன் எனது கல்லூரித் தோழன். இத்தனை ஆண்டுகள் கழித்து இங்கெப்படி? அதுவும் தனியாக மதுவருந்திக்கொண்டு? விசாரித்த பிறகு எல்லாவற்றையும் சொன்னான் விரக்தியோடு. கல்லூரி முடிந்ததும் அவனும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மூன்றாண்டுகள் வேலை பார்த்துவிட்டு MBA படிக்க இங்கு டெல்லி கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அங்கே இளாவும் சேர்ந்திருக்கிறாள். இளா என்றால் இளவரசி. அவளும் எங்களுடையக் கல்லூரித்தோழி தான். பழைய கல்லூரித்தோழர்கள் என்பதால் இயல்பாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாமாண்டு தான் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. காதலே வெட்கப்படுமளவுக்கு  ஆறுமாதம் காதலித்திருக்கிறார்கள். அதன்பிறகு வழக்கம்போல இளா வீட்டில் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் வரை செல்கையில் தன் காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள். ஆனால் அன்பையே ஆயுதமாக்கி அவளை அந்தத்  திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இவனிடம் வந்து ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அறிவுறை கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு சென்றிருக்கிறாள். நாளைக்கு அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம். இவன் துக்கம் தாங்காமல் இங்கு வந்திருக்கிறான்.


 


அவன் கதை முழுவதையும் கேட்டதும் எனக்கிருந்த உற்சாகமே போய் விட்டிருந்தது. இருவரும் இன்னும் மூன்று கோப்பை அருந்தினோம். அவன் தானே பேசிக்கொண்டு அழ ஆரம்பித்தான். நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். புகைக்குள் அருள் தெரிந்தான். இளா தெரிந்தாள். கால யந்திரமும் தெரிந்தது. அருளை எழுப்பி அவன் காதலை நான் காப்பாற்றுவதாக சொன்னேன். அவன் நம்பாமல் பார்த்தான். எனது செல்பேசியெண்ணை அவனிடம் கொடுத்து அடுத்த நாள் காலை 11 மணிக்கு என்னை தொடர்புகொள்ள சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன். எனக்கு ‘திக்’ ‘திக்’ என்றிருந்தது.


 


அடுத்த நாள் காலை ‘எதிர்காலம்’ சொன்ன படியே, எனது காலயந்திரம் கடந்த காலத்துக்கும் வேலை செய்யத்துவங்கியிருந்தது. எதிர்காலம் போலவே இதுவும் ஓராண்டுக்கு மட்டுமே. எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்க மட்டும்தான் முடியும். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை மனத்திரையில் பார்க்கலாம் + குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்று நமது செயல்களை மாற்றிவிடலாம். அதுதான் எனக்கு அருளையும் இளாவையும் சேர்த்துவிடும் நம்பிக்கையைத் தந்தது. பரிசோதனை செய்துகொள்வதற்காக காலயந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்தகாலத்தை தெரிவு செய்தேன். அருளை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். முந்தைய நாள் சந்திப்பு மனத்திரையில் ஓடியது. எனக்குத் தேவையான கடைசி இரண்டு நிமிட கால இடைவெளியைத் தெரிவு செய்து கொண்டு கடந்த காலத்துக்குள் நுழைந்தேன். என்னுடைய செல்பேசிக்கு பதிலாக வேறொரு எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். எதிர்பார்த்தபடியே 11.15 வரை அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதன்பிறகு அவனுடைய எண்ணுக்கு நானே அழைத்தேன். வேறொரு எண்ணைக் கொடுத்துவிட்டதற்காக என்னைத்திட்டினான். நான் போதையில் தவறாக சொல்லியிருப்பேனென்று மன்னிப்பு கேட்டுவிட்டு என் முகவரி சொல்லி எனதறைக்கு அவனை வரச்சொல்லியிருந்தேன். அவன் வரும்வரை எனக்கு இருப்பு கொள்ள வில்லை.


 


நான் செய்யப்போவது எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா என்று படபடப்பாக இருந்தது. கால யந்திரந்திலேயே பார்த்துவிடலாமென அதனுடன் என்னை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை தெரிவு செய்தேன். அருளையும், இளாவையும் மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினான். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னான். கடைசியாக அவள் ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னதாகவும் இவன் அமைதியாக இருந்ததாகவும், அவள் அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னான். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறான்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை.


அவர்களின் பெற்றோரைப் போலவே அவனும் அன்பையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவனை காலயந்திரத்தோடு இணைத்தேன். இளாவை நினைத்துக்கொண்டு கண்மூடினான். அவன் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தான்.


 


‘…என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’


‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’


 


சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினான்.


‘அப்பாடா இப்போதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குடா’


‘அருள், ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்! இளாவோட நம்பர் கொடுத்துட்டுப் போ’


‘நோட் பண்ணிக்கோ 9948645533’


அன்று கவலை குறைந்தவனாக அவனது விடுதிக்குக் கிளம்பிப் போனான்.


 


கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு இளாவுக்குத் தொலைபேசினேன். மிகவும் பதற்றமாக இருந்தது அவள் குரல். என் பெயரைச் சொன்னதும் அழ ஆரம்பித்துவிட்டாள். முந்தைய நாளிரவு மதுவருந்திவிட்டு வந்து விடுதியறையில் அருள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதியே பரபரப்பாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொன்னாள். கடந்த காலத்தில் மாற்றம் செய்ததால் எல்லாமே மாறிவிட்டிருந்தது. முந்தைய நாளிரவு என்னுடன் மதுவருந்திவிட்டுப் போனவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அப்படியானால் இளாவின் செல்பேசியெண் எனக்கு எப்படி கிடைத்திருக்கும்? குழப்பமாக இருந்தது. விடுதிக்கு உள்ளேயிருந்து யாரையும் வெளியிலும், வெளியிலிருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லையெனவும் அவள் வெளியில் மாட்டிக்கொண்டதாகவும் உள்ளே போக முடியவில்லையெனவும் அழுதாள். நான் வரும்வரை அவளை வெளியிலேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களுடைய விடுதிக்கு கிளம்பினேன்.


 


வாசலருகே இளா அழுதவாறு நின்றுகொண்டிருந்தாள். காவல்துறை அவள் மீதுதான் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குத் தொடரும் ஆபத்திருப்பதைச் சொன்னதும் பதற்றமாய் என்னைப் பார்த்தாள். எனக்கெல்லாம் தெரியுமென சொல்லி அவளை எதுவும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு எனதறைக்கு அழைத்துப்போனேன். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தாள். அவளை அமரச் சொல்லிவிட்டு அவளுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதையும் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தாள். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினாள். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக அவன்


இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை


 என்று சொன்னதாகவும், இவள்


‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு மட்டும் இஷ்டமா அருள்? நீ பையனா பொறந்துட்ட, உன்னால கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியும். நா பொண்ணாப் பொறந்துட்டேன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க நா விருப்பப்பட்டாலும், இந்த சமுதாயம் விடாது. மனசுல உன்ன நெனச்சுட்டு இன்னொருத்தனோட வாழ்ந்துதான் ஆகனும். அதத்தான் பண்ணப்போறேன்.பை.’ என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னாள். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறாள்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை. அருளைப் போலவே அவளும் மரணத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவளை காலயந்திரத்தோடு இணைத்தேன். அருளை நினைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தாள்.


 


‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’


 


‘மன்னிச்சிடு அருள். நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவன்னு எதிர்பார்த்துதான் நான் இப்படியொரு முடிவுக்கு ஒத்துக்கிட்டேன். நீ இப்படி சொன்னபின்னாடி நான் மட்டும் சந்தோசமாவா இருந்திடப்போறேன்? உன்னதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். இன்னொருத்தருக்கு தான்னு முடிவாயிடுச்சுன்னா, அந்த கல்யாணத்துக்கு முன்னாடி என் உயிர் போயிடும்.’


 


சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினாள்.


‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’


‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்’


அன்று கவலை குறைந்தவளாக அவளது விடுதிக்குக் கிளம்பிப் போனாள்.


 


ஒரு மாதம் கழித்து ஒருமுறை இருவரையும் ஒரு திரையரங்கில் சந்தித்தேன். மீண்டும் இணைந்து விட்டார்கள் போல. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும் ரகசியமாக நன்றி சொன்னார்கள். நான் இருவருக்கும் பொதுவாக புன்னகைத்தேன்.


 


ஆறுமாதம் கழித்து அருள் தொலைபேசியில் என்னையழைத்து மிகவும் பதற்றமாகப் பேசினான்.


 


‘மச்சான், தப்புப் பண்ணிட்டோம்டா…இளா செத்துட்டாடா…’


‘எப்படிடா? என்ன நடந்தது?’


‘லீவ்ல வீட்டுக்குப் போயிருக்கா. அப்பவே கல்யாணத்த முடிச்சிடனும்னு அவங்க வீட்ல ரொம்ப கம்பல் பண்ணியிருப்பாங்க போல… விஷம் குடிச்சிட்டா… போலீஸ் இப்போ என்னத்தேடுதாம். அனேகமா உன் வீட்டுக்கும் இந்நேரம் போலீஸ் வந்துட்டிருக்கும்’


அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு சத்தத்தோடு அவன் செல்பேசி உயிரிழந்தது.


 


பதற்றத்தோடு கால யந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்த காலத்தை தெரிவு செய்தேன். இளாவை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தேன்.


 


‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’


‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்பறம் ஒரு விசயம். இது சும்மா அருளுக்காக தான். நீ எந்த சூழ்நிலையிலயும் தற்கொலை முடிவுக்கெல்லாம் போகக்கூடாது. தற்கொலை பண்ணிக்கிறத விட நீங்க இப்பவே ஒரு பதிவுத்திருமணம் பண்ணிக்கிறது உங்களப் பாதுகாக்கும்’


 


நினைத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன்.


 


ஒரு மாதம் கழித்து அருளும், இளாவும் வந்திருந்தார்கள். அருள் வீட்டு சம்மதத்தோடு சொன்ன மாதிரியே பதிவுத்திருமணம் செய்துகொண்டு விட்டார்களாம். அப்புறம் இளா வீட்டிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு இரண்டாவது முறையாகத் திருமணம் நடக்கவிருக்கிறதாம். அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனார்கள். எனது கால யந்திரம் காதல் யந்திரமாய் மாறிப்போனதில் மகிழ்ச்சியே.


 


அவர்களுடையத் திருமணத்திற்கும் சென்றிருந்தேன். பரிசுப்பொருளைக் கொடுத்துவிட்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தற்பொழுதுதான் இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் எதிர்காலத்துக்குப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன்.


முதன்மதலாக அவன் கடந்த காலத்துக்கு சென்று பேசியதையும், இருந்தும் இளா பிடிவாதமாக இருந்ததால் அவன் தற்கொலை செய்துகொண்டதையும், பிறகு இளா கடந்தகாலத்துக்கு சென்று அவன் மனதை மாற்றியதையும், பின்னர் அவளும் தற்கொலை செய்துகொண்டதையும், இறுதியில் நான் கடந்த காலத்துக்கு சென்று இளா மனதை மாற்றி பதிவுத்திருமணம் செய்துகொள்ள வைத்ததையும், இரு வீட்டு சம்மதத்தோடு நடந்த இரண்டாவது திருமணத்தில் நான் கலந்து கொண்டதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் இப்போது வந்ததையும் சுருக்கமாகக்கூறினேன்.


 


பேயறைந்தவனைப்போல இருந்த அருள் , ‘நீ இன்னும் மாறவே இல்லையாடா’ என்று திட்டிவிட்டு தப்பித்து ஓடுபவனைப்போல் ஓடிவிட்டான்.


 


அதன்பிறகு என்னைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட்டார்கள். எல்லாம் அவனுக்கு உதவப்போய் வந்த வினை.


 


அந்த நோயாளி சொன்ன பதிலை ஒரு கதையைப்போல குறிப்பெடுத்துக்கொண்ட பொழிலன், பொன்னியிடம் சொன்னான் ‘its really different ponni’ . ‘yeah, But interesting. இத அதீத கற்பனைனு பாராட்டறதா இல்ல மனச்சிதைவு நோய்னு சொல்றதானு எனக்குத் தெரியல’ ஆமோதித்துவிட்டு அடுத்த வார்டுக்கு நகர்ந்தாள் பொன்னி.


 


‘முருகேசன்… நாங்க உளவியல் ஆய்வுக்காக உங்க கிட்ட பேச வந்திருக்கோம். நீங்க எப்படி இங்க வந்தீங்க?’


‘எனக்கு ரொம்ப நாளா என் முதுகுல யாரோ உட்காந்திருக்கிற மாதிரியே பயமா இருக்கு மேடம்…நான் சின்ன வயசுல எல்லாரையும் உப்பு மூட்டைத் தூக்கிட்டு விளையாடிட்டு இருக்கும்போது….’


வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.